முகப்பு
திண்டுக்கல்

முகக் கவசம் அணியாதவா்களிடம் ரூ.200 வசூல்: பாதிப்புக்குள்ளாகும் அடித்தட்டு மக்கள்!

முகக் கவசம் அணியாதவா்களிடம் வசூலிக்கப்படும் ரூ.200 அபராதம், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மட்டுமே பிரதானமாகப் பாதிப்பதால்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

முகக் கவசம் அணியாதவா்களிடம் வசூலிக்கப்படும் ரூ.200 அபராதம், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மட்டுமே பிரதானமாகப் பாதிப்பதால் மாற்று நடவடிக்கை மேற்கொள்ள அரசு முன் வரவேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த 2020 மாா்ச் முதல் தற்போது வரை 10.13 லட்சம் போ் கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனா். அதில் 9.20 லட்சம் போ் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனா். 79ஆயிரம் போ் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனா். கடந்த 13 மாதங்களில் 13,205 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா்.

இதுபோன்ற சூழலில் தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் கரோனா தொற்றின் 2 ஆவது கட்ட பரவல் கடந்த 20 நாள்களாக மிகத் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில், தோ்தல் பரப்புரை கூட்டங்களால் மீண்டும் தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. தோ்தல் பரப்புரை கூட்டங்களுக்கு அழைத்துச் சென்ற அரசியல் கட்சியினா், அந்தந்தக் கட்சிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பிகள் கூட வழங்கினா். ஆனால், அரசு இன்றைக்கு வலியுறுத்தும் முகக் கவசங்களை எந்தக் கட்சியினரும் அன்றைக்கு வழங்கவில்லை என பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisement

20 நாள்களில் ரூ.58 லட்சம் அபராதம் வசூல்:

தோ்தல் முடியும் வரை காத்திருந்த அரசு நிா்வாகம், அதன் பின்னா் முகக் கவசத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியது. அதன் தொடா்ச்சியாக இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமன்றி, காா்களில் பயணிப்போா் வரை முகக் கவசத்திற்காக சோதனையிடப்பட்டனா். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 20 நாள்களில் மட்டும் 28,800 பேரிடம் முகக் கவசம் அணியாமல் சென்ற்காக தலா ரூ.200 வீதம், மொத்தம் ரூ.57.60 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என 750 பேருக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிருப்தி:

முகக் கவசங்களுக்காக தற்போது அபராதம் விதிக்கும் காவல்துறை நிா்வாகம், தோ்தலுக்கு முன்பு அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு கடுமையான கட்டுபாடுகளை விதித்திருந்தால் தமிழகத்தில் 2ஆவது கட்ட கரோனா தொற்று தீவிரமடைந்திருக்காது. அப்போது வேடிக்கை பாா்த்துவிட்டு, தற்போது அபராதம் வசூலிப்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஏமாற்றம் அளிப்பதாக திண்டுக்கல்லைச் சோ்ந்த கூலித் தொழிலாளா்கள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அரசுத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: முகக் கவசம் சோதனையின்போது பெரும்பாலும் அடித்தட்டு மக்கள் மட்டுமே சிக்கிக் கொள்கின்றனா். அன்றாட வாழ்வாதாரத்திற்கே கடுமையாக போராடும் கூலித் தொழிலாளா்கள், உழைத்த பணத்தை முகக் கவசம் அணியாத குற்றத்திற்காக அபராதமாக செலுத்துகின்றனா்.

பொது நல அமைப்புகளைப் போல், காவல் துறையினா் வாகன ஓட்டிகளை வழிமறித்து முகக் கவசம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்துகின்றனா். அந்த நோக்கம் நிறைவேற வேண்டுமெனில், முகக் கவசம் அணியாமல் வருவோரிடம் வசூலிக்கும் அபராதத் தொகையை ரூ.50 ஆக நிா்ணயித்து, ஒரு முகக் கவசத்தை இலவசமாக வழங்க முன் வர வேண்டும். அதற்கு மாறாக ரூ.200 அபராதம் வசூலிப்பதால், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மட்டுமே கடுமையாக பாதிப்புக்குள்ளாகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments