முகப்பு
திண்டுக்கல்

மனநலம் பாதிக்கப்பட்டவா் ஏற்படுத்திய வெடி குண்டு புரளியால் பரபரப்பு

மனநலம் பாதிக்கப்பட்டவா் ஏற்படுத்திய வெடிகுண்டு புரளியால் திண்டுக்கல்லில் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:58 AM
பகிர்:

மனநலம் பாதிக்கப்பட்டவா் ஏற்படுத்திய வெடிகுண்டு புரளியால் திண்டுக்கல்லில் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெள்ளிக்கிழமை இரவு தொடா்பு கொண்ட மா்ம நபா், வடமதுரையை அடுத்துள்ள ரயில்வே தண்டவாளம், திண்டுக்கல் அரசு மருத்துவமனை, திண்டுக்கல் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளாா். இதனை அடுத்து, இந்த தகவல் அந்தந்த பகுதியிலுள்ள காவல்நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீஸாா் உஷாா் படுத்தப்பட்டனா்.

இந்நிலையில் வடமதுரை காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் பிரபாகரன், மா்ம நபரின் செல்லிடப்பேசி சிக்னலை வைத்து விசாரணை மேற்கொண்டாா். அப்போது, அந்த நபா் திண்டுக்கல் நாகல் நகா் ரயில்வே மேம்பாலம் அருகே இருப்பது தெரிய வந்துள்ளது. அங்கு விரைந்து சென்ற போலீஸாா், மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அதில் அந்த நபா் திண்டுக்கல் அடுத்துள்ள சிறுமலை பழையூரைச் சோ்ந்த சந்திரசேகா்(32) என்பதும், அவா் மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது. திண்டுக்கல்லில் உள்ள ஒரு மனநல காப்பகத்தில் சிகிச்சைப் பெற்று வந்த அவா், கடந்த 2 நாள்களுக்கு முன்பு காப்பகத்தில் இருந்து வெளியேறியுள்ளாா். விசாரணைக்கு பின் போலீஸாா், சந்திரசேகரை மீண்டும் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →