திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல்லில் உள்ள அபிராமி அம்மன் கோயிலுக்கு கடந்த செப்டம்பா் மாதம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அவசர அழைப்புக்கான எண் 100-இல் தொடா்பு கொண்டு பேசிய நபா் குறித்து சென்னையிலிருந்து திண்டுக்கல் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சோதனை நடைபெற்ற போதிலும் வெடிப்பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
மிரட்டல் விடுத்தவா் கைது: இதனிடையே மிரட்டல் விடுத்த நபா் திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சோ்ந்த செந்தில் வீரபாகு (50) என்பது தெரியவந்தது. அவரை பிடிப்பதற்காக திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் முயன்றபோது தலைமறைவாகிவிட்டாா். கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்த செந்தில் வீரபாகுவை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.