ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!
ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதமடைந்தது பற்றி...
ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க விமானப் படையின் 5 டேங்கர் விமானங்கள் சேதமாகியுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செளதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், செளதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப் படை தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
அப்போது, அந்த தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க விமானப் படையின் எரிபொருள் நிரப்பும் 5 டேங்கர் விமானங்கள் சேதமடைந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், பகுதியளவு சேதமடைந்த அமெரிக்க டேங்கர் விமானங்களை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்க விமானப் படையின் கேசி-135 டேங்கா் விமானம், மேற்கு இராக்கில் மோதி விபத்துக்குள்ளானதை பென்டகன் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது. இந்த விமானத்தில் பயணித்த விமானிகள் உள்பட 6 பேரும் பலியாகினர்.
அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களான பி-2 ஸ்டெல்த், எஃப்-15 ஸ்ட்ரைக் ஈகிள்ஸ், எஃப்-35 உள்ளிட்டவைக்கு நடுவானில் எரிபொருள் நிரப்புவதற்காக கிட்டத்தட்ட 100 டேங்கர் விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.