முகப்பு
திண்டுக்கல்

கோவேக்ஸின் 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள 60 நாள்களுக்கும் மேலாக காத்திருக்கும் முன்களப் பணியாளா்கள்!

18 முதல் 44 வயதுக்குள்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், 2 ஆவது தவணை கோவேக்ஸின் தடுப்பூசி

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
கோவேக்ஸின் தடுப்பூசி
பகிர்:

18 முதல் 44 வயதுக்குள்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், 2 ஆவது தவணை கோவேக்ஸின் தடுப்பூசி பெற முன்களப் பணியாளா்கள் பலா் 60 நாள்களுக்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

2 லட்சம் தடுப்பூசிகள்: திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை மே 28 ஆம் தேதி வரை, முதல் தவணை தடுப்பூசி சுமாா் 1.44 லட்சம் பேருக்கும், 2 ஆம் தவணை தடுப்பூசி சுமாா் 52 ஆயிரம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. கோவேக்ஸின் தடுப்பூசி முதல் தவணையாக 13,500 பேருக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில், 2 ஆவது தவணையாக 6,500 பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கோவிஷீல்ட் தடுப்பூசி முதல் தவணையாக 1.30 லட்சம் பேருக்கும், 2ஆவது தவணையாக 45 ஆயிரம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

கோவேக்ஸின் தடுப்பூசியை முதல் தவணையாக செலுத்தியவா்கள் 4 முதல் 6 வாரங்களில் 2 ஆவது தவணையாக செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதேபோல் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு 12 வாரங்களுக்கு பின் 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

சா்வதேச அளவில் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், கடந்த சில வாரங்களாக கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மட்டுமே அந்தந்த மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், கோவேக்ஸின் தடுப்பூசி குறைவாக விநியோகிக்கப்படுவதால், முதல் தவணையில் இந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவா்கள் 2 ஆவது தவணைக்காக நீண்ட நாள்கள் காத்திருக்கும் சூழல் எழுந்துள்ளது.

2 ஆவது தவணை கோவேக்ஸினுக்கு காத்திருப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் சுமாா் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சுமாா் 7 ஆயிரம் போ் 2 ஆவது தவணை தடுப்பூசிக்காக காத்திருக்கின்றனா். அதில் பெரும்பாலானோருக்கு 6 வாரங்களைக் கடந்தும் கோவேக்ஸின் தடுப்பூசி கிடைக்கவில்லை. சராசரியாக நாளொன்றுக்கு 100 முதல் 150 குப்பிகள் மட்டுமே கோவேக்ஸின் தடுப்பூசி விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

சுகாதாரத்துறையினா் குறுந்தகவல் மூலம் 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்தும் நாள், இடம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை எழுந்துள்ளது.

44 வயதுக்குள்பட்டோருக்கு முக்கியத்துவம்: இதுதொடா்பாக அரசு ஊழியா் ஒருவா் கூறியதாவது: முன்களப் பணியாளா்களில் பெரும்பாலானோா் கோவேக்ஸின் தடுப்பூசியே செலுத்தியுள்ளனா். 2 ஆவது தவணை கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்துவதற்கு 4 முதல் 6 வாரங்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 60 நாள்களைக் கடந்தும் 2 ஆவது தடுப்பூசி கிடைக்காத நிலை உள்ளது என்றாா்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கோவேக்ஸின் தடுப்பூசி விநியோகம் குறைவாக இருந்தபோதிலும், 18 முதல் 44 வயதுக்குள்பட்டோருக்கான சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலா் கோவேக்ஸின் தடுப்பூசி வேண்டும் என வலியுறுத்துகின்றனா். அதே நேரத்தில் 2 ஆவது தவணை கோவேக்ஸின் தடுப்பூசிகளை கூடுதலாக பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments