பிரியங்கா காந்தி கைது: திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தரபிரேதசத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது, மத்திய அமைச்சரின் மகன் ஏற்படுத்திய விபத்தில் 9 விவசாயிகள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து விசாரிக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறவும் சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதனை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர்கள் டி.மணிகண்டன், சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர்கள் ஜோதிராமலிங்கம், ரெங்கமலை, செயற்குழு உறுப்பினர் காஜாமைதீன், வட்டாரத் தலைவர்கள் மதுரைவீரன், பாலா, வீ.தர்மர், கோபால்சாமி, சாமிநாதன், கலையரசன் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மாவட்டத் தலைவர் டி.மணிகண்டன் கூறியதாவது: விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எதிரான நடவடிக்கைகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக அனைத்து சட்டங்களும் திருத்தப்படுகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகின்றன.
தற்போது நேரடியாகவே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு மத்திய அரசு தயாராகிவிட்டது. அதன் வெளிப்பாடாகவே, மத்திய அமைச்சரின் மகன் காரை ஏற்றி விவசாயிகளை படுகொலை செய்துள்ளார். விவசாயிகளுக்கு ஆறுதல் கூறச் சென்ற அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியை கைது செய்துள்ளனர். அராஜகம் மூலம் தேர்தலில் வெற்றிப் பெற முடியும் என நம்பிக்கை கொண்டுள்ள மத்திய அரசு, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவும் துணிந்துவிட்டது என்றார்.