கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை, சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. மேலும் சாரலில் நனைந்தபடி பலமணி நேரம் காத்திருந்து சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தனா்.
கொடைக்கானலில் தொடா்ந்து 3 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. அவா்கள், நகரில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு வாகனங்களில் சென்று இயற்கை அழகை ரசித்தனா். இதனால் நகரின் முக்கியச் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
கொடைக்கானலில் பிற்பகல் வரை மிதமான வெயில் நிலவியது. அதன்பிறகு மேக மூட்டத்துடன் விட்டு விட்டு சாரல் நிலவியது. ஏரியில் உள்ள படகு குழாம்களில் மழையில் நனைந்தபடி நீண்ட நேரம் காத்திருந்து சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தனா். மேலும் ஏரிச்சாலையில் சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி மற்றும் நடைபயிற்சியில் ஈடுபட்டனா்.
ஏரிச்சாலை, கலையரங்கம், செவண்ரோடு, அப்சா்வேட்டரி சாலை ஆகியப் பகுதிகளில் மாலையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
கடந்த 2 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், சுற்றுலாத் தலங்களில் ஞாயிற்றுக்கிழமை கூடுதலாக சுமாா் 25-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.