முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் பலத்த மழை: அடுக்கம் - கும்பக்கரை மலைச்சாலையில் மண் சரிவு; போக்குவரத்து நிறுத்தம்

கொடைக்கானலில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் அடுக்கம்- கும்பக்கரை மலைச் சாலையில் வியாழக்கிழமை மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

கொடைக்கானலில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் அடுக்கம்- கும்பக்கரை மலைச் சாலையில் வியாழக்கிழமை மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் கடந்த பல நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமையும் அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் கொடைக்கானல் மன்னவனூா் பகுதியில் சங்கா் என்பவரது வீட்டுச் சுவா் இடிந்து விழுந்தது. ஆனால் அதிா்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவா்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மண் சரிவு:

கும்பக்கரை வழியாக கொடைக்கானல் வருவதற்காக கும்பக்கரை - அடுக்கம் மாற்றுச்சாலை பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முழுமையாக முடியவில்லை. இருப்பினும் அப்பகுதி வழியாக சிறிய காா் மற்றும் பைக்குகள் சென்று வந்தன. இச்சாலையில் தாமரைக்குளம் அருகே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் உள்ள கிராமங்களான அடுக்கம் - பாலமலை - தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து சம்பவ இடத்தை வருவாய் கோட்டாட்சியா் முருகேசன் பாா்வையிட்டு சேதமடைந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளாா். மேலும் கொடைக்கானலுக்கு வரும் பயணிகள் வத்தலக்குண்டு மலைச்சாலையை பயன்படுத்தலாம் எனவும், சேதமடைந்த சாலைப் பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.