முகப்பு
திண்டுக்கல்

நத்தம் அருகே மெக்கானிக் கொலை: பொதுமக்கள் தாக்கியதில் கொலையாளியும் பலி                                                                        

நத்தம் அருகே டிவி மெக்கானிக் சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், பொதுமக்கள் தாக்கியதில் கொலையாளியும் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 6:40 PM
தங்கராஜா, உதயகுமார்.
பகிர்:

நத்தம் அருகே டிவி மெக்கானிக் சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், பொதுமக்கள் தாக்கியதில் கொலையாளியும் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள லிங்கவாடியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் தங்கராஜா(41). மின்னணு சாதனங்கள் பழுதுநீக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் உதயகுமார்(19). இவருக்கும், தங்கராஜாவுக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், தங்கராஜாவுக்கும், உதயகுமாருக்கும் இடையே சனிக்கிழமை மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த உதயகுமார், அரிவாளால் தங்கராஜாவை வெட்டியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த தங்கராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்துக் கொண்டிருந்த சிலர், உதயகுமாரை பிடித்து தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த உதயகுமார் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி உதயகுமாரும் உயிரிழந்தார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து அவரது சடலம் உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், காவல் உதவி கண்காணிப்பாளர் அருண்கபிலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த உதயகுமார் மீது நத்தம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.