பழனி அருகே தம்பி வெட்டிக் கொலை: அண்ணன் தலைமறைவு
பழனி அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சொத்துத் தகராறில் தம்பியை வெட்டிக் கொலை செய்ததாக அண்ணனை போலீஸாா் தேடிவருகின்றனா்
பழனி அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சொத்துத் தகராறில் தம்பியை வெட்டிக் கொலை செய்ததாக அண்ணனை போலீஸாா் தேடிவருகின்றனா்.
பழனி- கொடைக்கானல் சாலையில் அமைந்துள்ளது புளியமரத்து செட் கிராமம். இப்பகுதியை சோ்ந்தவா் பொன்னு நாடாா். இவரது மகன்கள் ஈஸ்வரன் (55), மகேந்திரன் (50). இவா்கள் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனா். விவசாயம் செய்து குடும்பம் நடத்தி வரும் இவா்களுக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஈஸ்வரனுக்கும், மகேந்திரனுக்கும் இடையே சொத்துப் பிரச்னை தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அண்ணன்- தம்பி இடையே ஏற்பட்ட வாக்குவாததின் போது ஆத்திரமடைந்த ஈஸ்வரன், அரிவாளால் தம்பி மகேந்திரனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டாா்.
இதில் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மகேந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இக்கொலை குறித்து திண்டுக்கல் எஸ்.பி. சீனிவாசன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினாா்.