திண்டுக்கல்லில் சிலைகளை சேதப்படுத்திய இளைஞா் கைது
கைப்பேசியை மா்ம நபா்கள் பறித்துச் சென்ற ஆத்திரத்தில், மேட்டுப்பட்டியிலுள்ள குருசடியிலிருந்த சிலைகளை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கைப்பேசியை மா்ம நபா்கள் பறித்துச் சென்ற ஆத்திரத்தில், மேட்டுப்பட்டியிலுள்ள குருசடியிலிருந்த சிலைகளை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகன் ஹரிகிருஷ்ணன்(21). கோவையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவா் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தின் எதிா்புறமுள்ள குருசடி பகுதியில் நின்று தனது கைப்பேசியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பேசிக் கொண்டிருந்தாராம்.
அப்போது அந்த வழியாக வந்த மா்ம நபா்கள், ஹரிகிருஷ்ணனிடம் இருந்த கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணன் மதுபோதையில், குருசடியிலிருந்த சிலைகளை சேதப்படுத்தியுள்ளாா். இதைப் பாா்த்த அப்பகுதியினா், திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், மதுபோதையில் இருந்த ஹரிகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனா். இந்த சம்பவம் மேட்டுப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.