துரந்தர் - 2 தமிழில் நாளை வெளியாகிறது!
துரந்தர் தி ரிவென்ஞ் திரைப்படம் தமிழில் நாளை வெளியாகவுள்ளது.
ஆதித்ய தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் தி ரிவென்ஞ் திரைப்படம் தமிழில் நாளை (மார்ச் 21) வெளியாகவுள்ளது.
முதல் பாகத்தில் பாகிஸ்தானுக்கு உளவாளியாக செல்லும் ரன்வீர் சிங், அங்கிருந்து இந்தியாவுக்கு பயங்கரவாதிகள் ஊடுருவுவது, ஆயுதங்கள் கடத்துவது, கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது போன்ற தகவல்களை சேகரிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற துரந்தர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான துரந்தர்: தி ரிவென்ஞ்ச் நேற்று (மார்ச் 19) வெளியானது.
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜூன், அக்ஷய் கன்னா, சஞ்சய் தத், மாதவன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களின் நடிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
முதல் பாகம் ஹிந்தியில் மட்டும் வெளியாகி ரூ. 1,000 கோடிக்கும் மேல் வசூலித்த நிலையில், இரண்டாம் பாகம் நேரடியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிகள் நேற்றுமுன் தினம் (மார்ச் 18) அன்று வெளியிடப்பட்டன. அதில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹிந்தி தவிர்த்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட வேற்று மொழிக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், நேற்று உலகம் முழுவதும் துரந்தர் படம் வெளியானது. முதல் நாளில் மட்டுமே ரூ. 240 கோடிக்கும் மேல் வசூல் செய்த இந்தப் படம், தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஹிந்தி மொழியில் மட்டுமே வெளியாகி ரூ. 3 - 4 கோடி வரை வசூலித்துள்ளது
இதனைத் தொடர்ந்து, தமிழ் மொழியில் காட்சிகள் ரத்தான நிலையில் இப்படத்தின் தமிழ் பதிப்பு சென்சார் செய்யப்பட்டு நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நாளை முதல் தமிழிலும் இந்தத் திரைப்படம் வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.