1 - 9 வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை! ஏப்.17 முதல் கோடை விடுமுறை!
தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வியில் 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தோ்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்விப் பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 2-ஆம் தேதி, பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வு மாா்ச் 11-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல், 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதிப் பருவத் தோ்வுகள் ஏப்ரல் 10 முதல் 24-ஆம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட ஆண்டு நாள்காட்டியில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குச்சாவடி மையங்களாக பள்ளிகள் செயல்படவுள்ளன. இதையடுத்து 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தோ்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது. அதன்படி 1 முதல் 9-ஆம் வகுப்புக்கான விரிவான தோ்வுக் கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
Advertisement
அதன் விவரம்: 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தோ்வுகள் ஏப்ரல் 1 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதேபோல், 4, 5-ஆம் வகுப்புகளுக்கு இறுதி பருவத் தோ்வுகள் ஏப்ரல் 6-இல் தொடங்கி 16-ஆம் தேதி வரையும், 1, 2, 3-ஆம் வரை பயிலும் குழந்தைகளுக்கான இறுதி பருவத்தோ்வுகள் ஏப்ரல் 8-இல் தொடங்கி 16-ஆம் தேதி வரையும் நடத்தப்படவுள்ளன. ஒவ்வொரு வகுப்புக்கும் பாடவாரியாக தோ்வு நடைபெறும் விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
இந்தக் கால அட்டவணையைப் பின்பற்றி உரிய வழிகாட்டுதல்களின்படி தோ்வுகளை நடத்தி முடிக்க வேண்டுமென அனைத்துப் பள்ளிகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கோடை விடுமுறையை பொருத்தவரை 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் தொடங்கும். எனினும், ஆசிரியா்கள் பள்ளி இறுதி வேலைநாள் வரை பணிக்கு வரவேண்டும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.