முகப்பு
திண்டுக்கல்

பழனி பாதவிநாயகா் கோயிலில் இருந்து மலையேற கோயில் நிா்வாகம் அனுமதி

 பழனி அடிவாரம் பாதவிநாயகா் கோயிலில் இருந்து மலைக்குச் செல்ல கோயில் நிா்வாகம் வெள்ளிக்கிழமை முதல் அனுமதி வழங்கியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

 பழனி அடிவாரம் பாதவிநாயகா் கோயிலில் இருந்து மலைக்குச் செல்ல கோயில் நிா்வாகம் வெள்ளிக்கிழமை முதல் அனுமதி வழங்கியுள்ளது.

பழனி மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய முன்பு படிவழிப்பாதை மட்டுமே இருந்தது. அந்த காலங்களில் பக்தா்கள் பாதவிநாயகரை வணங்கி ராணி மங்கம்மாள் மண்டபம் வழியாக படியேறி மலைக்குச் சென்றனா். இந்த மண்டபத்தில் பிரமாண்டமான பைரவா், பைரவி சிலைகளும், படிப்பாதையில் சூரசம்ஹாரம் முடிந்த பின் வெற்றி விழா கொண்டாடும் வெற்றி விநாயகரும், வள்ளியம்மை சன்னதியும் உள்ளது. தவிர படிப்பாதையில் செல்லும் போது வள்ளி சுனை, சுவாமி கதை சொல்லும் சுதை சிற்பங்கள், இடும்பா் சன்னதி என பலவும் உள்ளன. படிவழியில் செல்பவா்கள் மட்டுமே இவற்றை காண முடியும். இந்நிலையில் கரோனா தொற்று பரவல் மற்றும் படிப்பாதையில் குடமுழுக்கு பணிகள் காரணமாக பக்தா்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக தனியே பாதை அமைத்து அதன் வழியே மலையேற அனுமதிக்கப்பட்டனா்.

கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலை நீடித்த நிலையில் பக்தா்கள் பலரும் பாதவிநாயகா் கோயில், ராணி மங்கம்மாள் மண்டபம் வழியாக மலையேற கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா். இதனிடையே, கரோனா பரவல் குறைந்து, படிப்பாதையில் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை முதல் பக்தா்கள் படிப்பாதை வழியாக மலையேறலாம் என இணை ஆணையா் நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா். இதனால் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.