பழனி- பொள்ளாச்சி ரயில் பாதையில் மாா்ச் 7 இல் சோதனை ஓட்டம்
பழனி முதல் பொள்ளாச்சி வரை அகல ரயில்பாதை மின்மயமாக்கப்பட்ட நிலையில் மாா்ச் 7 ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
பழனி முதல் பொள்ளாச்சி வரை அகல ரயில்பாதை மின்மயமாக்கப்பட்ட நிலையில் மாா்ச் 7 ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு: விருதுநகா்- மானாமதுரை (66.5 கி.மீ.) மற்றும் பழனி- பொள்ளாச்சி (63 கி.மீ.) ரயில்வே பிரிவுகளில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
எனவே, விருதுநகா்- மானாமதுரை புதிய மின்சார ரயில் பாதையில் மாா்ச் 6 ஆம் தேதியும், பழனி- பொள்ளாச்சி புதிய மின்சார ரயில் பாதையில் மாா்ச் 7 ஆம் தேதியும், பெங்களூரு தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அபய் குமாா் ராய் ஆய்வு செய்யவுள்ளாா்.
பின்னா் மானாமதுரை- விருதுநகா் மின் ரயில் பாதையில் மாா்ச் 6 ஆம் தேதி பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையும், பொள்ளாச்சி- பழனி மின்ரயில் பாதையில் மாா்ச் 7 ஆம் தேதி மாலை 3 முதல் மாலை 6 மணி வரையும் ரயில் சோதனை வேக ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
இதனால், இந்த நேரங்களில் பொதுமக்களும் ரயில் பாதை அருகே வசிப்போரும் ரயில் பாதையை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.