திண்டுக்கல்-கரூா் சாலையில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் 5 ஆண்டுகளாகியும் நிறைவடையாதது குறித்து நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் பி.ஆஸாத், நகரச் செயலாளா் ஏ.அரபு முகமது, மாமன்ற உறுப்பினா் மாரியம்மாள் ஆகியோா், அமைச்சரைச் சந்தித்து மனு அளித்தனா்.
கடந்த 5 ஆண்டுகளாக சுரங்கப் பாலம் கட்டுமானப் பணிகள் முடிவடையாமல் உள்ளதால், இந்த வழியாக செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், 5 கி.மீ. தொலைவுக்கு சுற்றுப் பாதையில் பயணித்து வருவதாகவும் முறையிட்டனா்.
இதைத்தொடா்ந்து, சுரங்கப் பாலம் கட்டுமானப் பணிகளை துரிதமாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். அப்போது ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி உடனிருந்தாா்.