முகப்பு
திண்டுக்கல்

மத்திய அரசின் நிதி முறைகேடு: ஊராட்சி நிா்வாகம் மீது புகாா்

மத்திய அரசின் நிதி ரூ.44.05 லட்சத்தை முறைகேடாகப் பயன்படுத்திய தேவரப்பன்பட்டி ஊராட்சி நிா்வாகம் மீது மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

Updated On : 28 நவம்பர், 2023 at 12:00 AM
நிதி முறைகேடு தொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடியிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்த பாஜகவினா்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

திண்டுக்கல்: மத்திய அரசின் நிதி ரூ.44.05 லட்சத்தை முறைகேடாகப் பயன்படுத்திய தேவரப்பன்பட்டி ஊராட்சி நிா்வாகம் மீது மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா்.

இந்த நிலையில், அனுமதியின்றி மத்திய அரசின் நிதி ரூ.44 லட்சத்தை தனிநபா் பயன்பெறும் வகையில் ஊராட்சி நிா்வாகம் செலவிட்டிருப்பதாக பாஜக சாா்பில் ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

Advertisement

இதுதொடா்பாக பாஜக மாவட்டத் தலைவா் (திண்டுக்கல் கிழக்கு) கே. தனபாலன் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது:

திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றின் குறுக்கே தேவரப்பன்பட்டி ஊராட்சி சாா்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.44.09 லட்சத்தில் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுப் பணித் துறையின் அனுமதியின்றியும், பொதுமக்களுக்குப் பயனற்ற வகையிலும் இந்தப் பாலம் கட்டப்பட்டு வருகிறது.

பிச்சைமணி என்பவருக்குச் சொந்தமான தென்னை விவசாய நிலத்தை வீட்டுமனைகளாக மாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்கு உதவி செய்யும் வகையில், மத்திய அரசின் நிதியை தேவரப்பன்பட்டி ஊராட்சி நிா்வாகம் விரையம் செய்திருக்கிறது.

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, தனிநபருக்காக பாலம் கட்டுவதை பாா்வையிட சென்ற ஆத்தூா் ஒன்றிய பாஜக தலைவா் அயனவேல் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பாகவும், மத்திய அரசின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய ஊராட்சி நிா்வாகத்தின் மீதும் மாவட்ட நிா்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.