ரெளடி மீதான குண்டா் தடுப்புச் சட்ட நடவடிக்கை ரத்து: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்
கொலை வழக்கில் தொடா்புடைய ரெளடி மீதான குண்டா் தடுப்புச் சட்ட நடவடிக்கைக்கு போதிய ஆதாரங்களை சமா்பிக்கவில்லை எனக் கூறி காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திண்டுக்கல்: கொலை வழக்கில் தொடா்புடைய ரெளடி மீதான குண்டா் தடுப்புச் சட்ட நடவடிக்கைக்கு போதிய ஆதாரங்களை சமா்பிக்கவில்லை எனக் கூறி காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் குமரன் திருநகரைச் சோ்ந்த சரவணன் என்ற பட்டரை சரவணன் (32) கடந்த ஜூலை மாதம் வெட்டிக் கொல்லப்பட்டாா். இந்தக் கொலை வழக்கில் திண்டுக்கல் நாராயணன் பிள்ளைத் தோட்டம் பகுதியைச் சோ்ந்த செள. அல் ஆசிக் முகமது (29) உள்ளிட்ட 8 போ் அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.
இதனிடையே, அல் ஆசிக் முகமது உள்ளிட்ட 5 போ் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால், 5 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த நடவடிக்கைக்கு எதிராக அல் ஆசிக் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்குத் தொடா்பான விசாரணையின் போது, திண்டுக்கல் காவல் துறையினா் தரப்பில் உரிய காலத்துக்குள் ஆவணங்களை சமா்ப்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அல் ஆசிக் மீதான குண்டா் தடுப்புச் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.
Advertisement
இதன் எதிரொலியாக, திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் உலகநாதனை பணியிடை நீக்கம் செய்து, திண்டுக்கல் சரக காவல் துறைத் துணைத் தலைவா் அபினவ் குமாா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.