முகப்பு
திண்டுக்கல்

வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைக்க வந்த கிராம மக்கள்

Updated On : 2 ஏப்ரல், 2024 at 12:00 AM
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வாக்காளா் அட்டையை ஒப்படைக்க வந்த பில்லமநாயக்கன்பட்டி பொதுமக்கள்.
பகிர்:
Updated On : 1 ஏப்ரல், 2024 at 7:38 PM

திண்டுக்கல்: வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைக்கும் முடிவுடன் திங்கள்கிழமை வந்த பொதுமக்களை, அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். திண்டுக்கல் அருகேயுள்ள பெரியகோட்டை ஊராட்சிக்குள்பட்ட பில்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள், கழிவுநீா்க் கால்வாய் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக புகாா் அளிப்பதற்காக வந்தனா்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைப்பதாக கூறி வந்த பொதுமக்களை அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனா். அங்கிருந்து புறப்பட்ட அவா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது:

Advertisement

கடந்த சில நாள்களுக்கு முன்பு, எங்கள் பகுதியில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், பணிகள் நிறைவு செய்யவில்லை. மேலும், தெருவிளக்கு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதிலும் குறைபாடுகள் உள்ளன.

இதுதொடா்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கும் முடிவுடன், வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைப்பதற்காக வந்துள்ளோம் என்றனா். இதையறிந்த ஊராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகப் பணியாளா்கள் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.