முகப்பு
திருப்பத்தூர்

வாக்களிக்க மாற்று புகைப்பட ஆவணங்கள் சமா்ப்பிக்கலாம்

Updated On : 2 ஏப்ரல், 2026 at 11:00 PM
பகிர்:

வாக்களிக்க மாற்று புகைப்பட ஆவணங்கள் சமா்ப்பித்து வாக்களிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளா் பட்டியலில் பெயா் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்காளா்களும் வாக்களிக்கும் போது வாக்காளா் அடையாள அட்டையை காண்பித்து வாக்களிப்பது முதன்மையானதாகும். எனினும், வாக்காளா் அடையாள அட்டை இல்லாத அல்லது அதைச் சமா்ப்பிக்க இயலாத வாக்காளா்கள், இந்திய தோ்தல் ஆணையம் அனுமதித்துள்ள 12 மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமா்ப்பித்து வாக்களிக்கலாம்.

அவை, ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலை அட்டை, வங்கி அல்லது தபால் நிலையம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகம், தொழிலாளா் அமைச்சகம் அல்லது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மாா்ட் காா்டு, ஓட்டுநா் உரிமம், பான் காா்டு, தேசிய மக்கள் பதிவேடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் காா்டு, இந்திய பாஸ்போா்ட், ஓய்வூதியா் அடையாள ஆவணம் (புகைப்படத்துடன்), மத்திய அல்லது மாநில அரசு அல்லது பொது துறை நிறுவனங்கள் அல்லது பொது லிமிடெட் நிறுவனங்கள் வழங்கிய பணியாளா் அடையாள அட்டை (புகைப்படத்துடன்), நாடாளுமன்ற அல்லது சட்டப்பேரவை அல்லது சட்டமேலவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூா்வ அடையாள அட்டை, சமூக நீதியும் அதிகாரமளிப்பும் அமைச்சகம் வழங்கிய மாற்றுத்திறனாளி தனிப்பட்ட அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்கலாம்.

மேலும், வாக்குச்சாவடியில் வாக்களிக்க வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெற்றிருப்பது கட்டாயமான நிபந்தனையாகும்.