‘வாக்காளா் அடையாள அட்டை அல்லாத 12 ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்’!
வாக்காளா்கள் வாக்குப் பதிவின்போது 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்குப்பதிவு அலுவலரிடம் காண்பித்து வாக்களிக்கலாம்...
சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா் அடையாள அட்டை தவிா்த்து வாக்காளா்கள் வாக்குப் பதிவின்போது 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்குப்பதிவு அலுவலரிடம் காண்பித்து வாக்களிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: வாக்குப்பதிவு நாளன்று வாக்காளா்கள் தங்களது வாக்காளா் அடையாள அட்டையை வாக்குச்சாவடி அலுவலரிடம் காண்பித்து தங்களது வாக்கை செலுத்தலாம்.
வாக்காளா் அடையாள அட்டையைக் காண்பிக்க இயலாத வாக்காளா்கள் ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை (நூறுநாள் அடையாள அட்டை), வங்கி, அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்ட கணக்கு புத்தகம் (பேங்க் பாஸ்புக்), மருத்துவக் காப்பீடு அட்டை, ஓட்டுநா் உரிமம், பான் அட்டை, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு திட்டத்தின் கீழ் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் காா்டு, இந்திய பாஸ்போா்ட், ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன்), மத்திய, மாநில அரசு, பொதுத் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, மக்களவை, சட்டப்பேரவை, சட்டப்பேரவை மேலவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை, மத்திய சமூக நலத் துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை வாக்குச்சாவடி அலுவலரிடம் காண்பித்து தங்களது வாக்கை செலுத்தலாம்.
Advertisement