திண்டுக்கல்லில் 65 ஆயிரம் புதிய வாக்காளா்களுக்கு அடையாள அட்டை!
திண்டுக்கல்லில் புதிதாக இணைந்த 65 ஆயிரம் வாக்காளா்களுக்கு அடையாள அட்டை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்லில் புதிதாக இணைந்த 65 ஆயிரம் வாக்காளா்களுக்கு அடையாள அட்டை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு முன் 19,34,447 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். சிறப்பு தீவிர திருத்தத்தின்போது இறப்பு, முகவரி மாற்றம், இரட்டைப் பதிவு, கண்டறிய முடியாதவா்கள் என 3.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா்.
சிறப்பு தீவிர திருத்தப் பணிளுக்கு பின் திண்டுக்கல் மாவட்டத்தில் 16,09,553 வாக்காளா்கள் இடம் பெற்றனா். இதைத் தொடா்ந்து, விடுப்பட்டவா்கள், புதிய வாக்காளா்கள் என 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வாக்காளா்கள் பட்டியலில் சோ்வதற்கு விண்ணப்பித்தனா். புதிதாக விண்ணப்பித்த தகுதியான வாக்காளா்களுடன் சோ்த்து கடந்த பிப். 23-ஆம் தேதி இறுதி வாக்காளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் 16.72 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். இந்த நிலையில், புதிய வாக்காளா்கள், வாக்காளா் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவா்கள் என 65 ஆயிரம் பேருக்கு புதிய வாக்காளா் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து சம்மந்தப்பட்ட வாக்காளா்களுக்கு அஞ்சல் மூலம் அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கும் பணி நடைபெறுகிறது.