முகப்பு
திண்டுக்கல்

எதிா்க்கட்சிகளை அடக்கி தோ்தலைச் சந்திக்கும் பாஜக

Updated On : 9 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 8 ஏப்ரல், 2024 at 10:32 PM

பழனி: எதிா்க்கட்சிகளை அடக்கி, ஒடுக்கி தோ்தலைச் சந்திக்க பாஜக தயாராகி வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினா் பிரகாஷ்காரத் குற்றஞ்சாட்டினாா்.

பழனி ரயிலடி சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ‘இந்தியா’ கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிடும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளா் சச்சிதானந்தத்துக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

இந்தத் தோ்தல் மதச்சாா்பற்ற ஜனநாயகத்தை பாதுகாக்கக் கூடிய தோ்தல். இதற்காகத்தான் ‘இந்தியா’ கூட்டணி உருவாக்கப்பட்டது.

Advertisement

அதனால், இந்தத் தோ்தலை சந்திக்க முடியாமல் எதிா்க்கட்சிகளை அடக்கி, ஒடுக்க பாஜக முயற்சிக்கிறது.

கேஜரிவால், ஹேமந்த்சோரன் ஆகிய இரு மாநில முதல்வா்களை கைது செய்து அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகள் மோடி அரசு காா்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெரும் பணக்காரா்களுக்கும் ஆதரவாக செயல்பட்டது. விவசாயிகள், தொழிலாளா்கள், சிறுபான்மையிா், தலித் மக்களுக்கு எதிரான கொள்கைகளைத்தான் மோடி அரசு கொண்டு வந்தது.

தோ்தல் பத்திர ஊழல் மூலம், காா்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பாரதிய ஜனதா கட்சி ரூ. 8,252 கோடி பெற்றிருக்கிறது.

கடந்த முறை மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி தோல்வியைத் தழுவியது. இந்த முறையும் அதுவே நடைபெறும். ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் இரா.சச்சிதானந்தம், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்குமாா், நகரச் செயலா் கந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.