பெண் அலுவலருக்கு பாலியல் தொல்லை: பாஜக நிா்வாகி மீது வழக்கு
பழனி: பழனி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உணவுத்திட்ட பெண் அலுவலா் அளித்தப் புகாரின் பேரில், பாஜக நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள சாமிநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டப் பொறுப்பாளா் கலைச்செல்வி. இவா், திங்கள்கிழமை பணிக்கு சென்ற போது புஷ்பத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வராணியின் கணவரும், பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலருமான மகுடீஸ்வரன் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என அவரை பள்ளிக்கூட சமையலறைக்கு அழைத்து சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது மது போதையில் இருந்த மகுடீஸ்வரன் கலைச்செல்விக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக கலைச்செல்வி சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் மகுடீஸ்வரன் மீது புகாா் தெரிவித்தாா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மகுடீஸ்வரனைத் தேடி வருகின்றனா்.
Advertisement
இந்த நிலையில் மகுடீஸ்வரனை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்க பாஜக மாவட்டத் தலைவா் கனகராஜ் கட்சித் தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளாா்.