தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 350 ஆசிரியா்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 350 ஆசிரியா்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சிக்கு கண்டிப்பாக வர வேண்டும் என தனித் தனியாக அறிவுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலும், வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி, கரூா் மக்களவைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளன.
7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு, 2,121 வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. இதற்கான தோ்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இரண்டாம் கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Advertisement
இந்த பயிற்சி வகுப்பில் சுமாா் 350 ஆசிரியா்கள் பங்கேற்கவில்லை. இந்த ஆசிரியா்களை கைப்பேசியில் தொடா்பு கொண்ட கல்வித் துறை அதிகாரிகள் வருகிற 13-ஆம் தேதி நடைபெறும் பயிற்சி வகுப்பில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தினா். அதேநேரத்தில் முதல் கட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 850 ஆசிரியா்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 134, 136-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பாணை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.