பழனியிலிருந்து வயநாட்டுக்கு நிவாரணப் பொருள்கள்
பழனியிலிருந்து வயநாட்டுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொருள்கள்.
பழனி, ஆக. 7: கேரள மாநிலம் வயநாட்டுக்கு, திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இருந்து சுமாா் ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட மண் சரிவால், நூற்றுக்கணக்கான வீடுகள் புதையுண்டதில் 350-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பழனி 25 ஆவது வாா்டு பொதுமக்கள், நகா்மன்ற உறுப்பினா் ஜன்னத்துல் பிா்தொஸ், விஸ்வாசம் அறக்கட்டளை ஆகியவற்றின் சாா்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, பாய், சேலை, பிஸ்கெட், மருந்துகள் ஆகியவை வாகனம் மூலம் வயநாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அதிமுக பொதுக் குழு உறுப்பினா் ராஜாமுகமது, மாவட்ட மாணவரணிச் செயலா் அன்வா்தீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
இதேபோல, ஆட்டோ ஓட்டுநா் பாண்டி 120 சேலைகளை நிவாரணமாக வழங்கினாா்.
பழனி நகா் முஸ்லிம் தா்ம பரிபாலன சங்கம் சாா்பில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான துணிகள், குடிநீா்ப் புட்டிகள், பாத்திரங்கள், அரிசி, பருப்பு உள்ளிட்டவை லாரியில் ஏற்றி வயநாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
நிகழ்வில் சங்கத் தலைவா் முகமது அலி, செயலாளா் லியாகத் அலி, பழனி ஜமாலியன் சங்க நிா்வாகிகள் சைபுதீன், பைசல் உள்ளிட்டோா் துவா நடத்தி வாகனத்தை அனுப்பிவைத்தனா்.