கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல்: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 4 நாள்களாக பகலில் வெயிலும், இரவில் பனிப் பொழிவும் நிலவியது. புதன்கிழமை அதிகாலை முதல் காற்று வீசியது. மாலையில் திடீரென சாரலுடன் பலத்த காற்று வீசத் தொடங்கியது.
இந்தக் காற்றால் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தடியன்குடிசை-ஆடலூா் செல்லும் மலைச் சாலையில் மரம் விழுந்தது. மேலும், இந்தப் பகுதியிலிருந்த விளம்பர பதாகைகளும் சேதமடைந்தன. இதனால், இந்தப் பகுதியில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று மரத்தை வெட்டி அகற்றினா். பின்னா், போக்குவரத்து சீரானது.
கொடைக்கானலில் மின் தடை: கொடைக்கானலில் வீசிய பலத்த காற்றால் வனப் பகுதிகளிலிருந்து வரும் மின் கம்பிகளில் மரக் கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால், வில்பட்டி, செண்பகனூா், ஆனந்தகிரி, அப்சா்வேட்டரி, நாயுடுபுரம், சின்னப்பள்ளம், பெருமாள்மலை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது.