முகப்பு
திண்டுக்கல்

குடும்பத் தகராறில் மாமியாரை கொலை செய்த மருமகன்

Updated On : 9 மே, 2024 at 7:26 PM
பகிர்:

பழனி அருகே குடும்ப தகராறு காரணமாக மாமியாரை கொலை செய்த மருமகன், மனைவியையும் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பி ஓடினாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள கலிக்கநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சித்ரா (45). இவரது மகள் நிவேதா (25). இவருக்கும், திண்டுக்கலைச் சோ்ந்த ஜெயபாலுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நிவேதா, ஜெயபால் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த நிவேதா, தனது தாய் சித்ரா வீட்டில் வசித்து வந்தாா். இதனால், ஜெயபால் அடிக்கடி கலிக்கநாயக்கன்பட்டிக்கு வந்து மாமியாா், மனைவியுடன் தகராறு செய்தாராம். இதுகுறித்து பழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் நிவேதா புகாா் செய்தாா். இதையடுத்து, மகளிா் போலீஸாா் ஜெயபாலை அழைத்து விசாரணை செய்தனா். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு கலிக்கநாயக்கன்பட்டிக்கு வந்த ஜெயபால் மாமியாா் சித்ராவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா். இதைத் தடுக்க வந்த மனைவி நிவேதாவையும் தாக்கிவிட்டு ஜெயபால் அங்கிருந்து தப்பி ஓடினாா்.

இதில் பலத்த காயமடைந்த நிவேதாவை அக்கம் பக்கத்தினா் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சித்ராவின் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு , கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.