பாகிஸ்தான்: குடும்பத் தகராறில் பயங்கரவாதி சுட்டுக் கொலை!
பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் சுட்டுக் கொலை
பாகிஸ்தானில் குடும்பத் தகராறில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதியான பிலால் ஆரிஃப் சரஃபி, முரிட்கே பகுதியில் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள இளைஞர்களை மூளைச் சலவை செய்து, பயங்கரவாத அமைப்புக்குள் கொண்டுவரும் வேலையை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரமலான் திருநாளான சனிக்கிழமையில் பிலால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில், அவரை குடும்பத்தினரே கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் கொன்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிலால் உயிரிழந்த நிலையில் தரையில் கிடப்பது போன்ற காட்சிகளும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, பிலாலின் கொலை சம்பந்தப்பட்டவர்கள் என அவரது குடும்பத்தினர் சிலரை போலீஸார் கைது செய்தனர். இருப்பினும், கொலைக்கான சரியான காரணம் என்னவென்று போலீஸார் தெரிவிக்கவில்லை.
பாகிஸ்தானும் பயங்கரவாதமும்
உலகளவில் பயங்கரவாத குற்றச்சாட்டுகளுக்கு பாகிஸ்தான் ஆளாகி வரும்நிலையில், தற்போது அந்த பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தானே இரையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டில் முதன்முறையாக முதலிடம் பிடித்துள்ள பாகிஸ்தான், 2025-ல் உலகில் பயங்கரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாகவும் உருவெடுத்துள்ளது.
2025-ல் மட்டும் 1,045 பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அவற்றில் 1,139 பேர் பலியாகினர். மேலும், 1,595 பேர் காயமடைந்ததுடன், 655 பேர் பிணைக் கைதிகளாகவும் பிடிக்கப்பட்டனர்.
2025-ல் தெற்காசியாவில் உள்ள மற்ற எல்லா நாடுகளும் முன்னேற்றத்தைப் பதிவுசெய்த நிலையில், பாகிஸ்தான் மட்டும் மோசமடைந்த நாடாக பதிவு செய்தது.
இந்நாட்டில் அதிகபட்ச பயங்கரவாத சம்பவங்களைச் சந்தித்த இரு மாகாணங்கள் கைபர் பக்துன்க்வா மற்றும் பலூசிஸ்தான்.
இந்த இரு மாகாணங்களில்தான் 74 சதவிகித தாக்குதல்களும், 67 சதவிகித உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.