பாகிஸ்தானில் ஈரான் - அமெரிக்கா போர்நிறுத்த பேச்சுவார்த்தை!
பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை குறித்து...
இஸ்ரேல், அமெரிக்கா உடனான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைக்கு ஈரானிலிருந்து 10 பேர் கொண்ட குழு வியாழக்கிழமை வந்தடையும் என ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய தாக்குல்கள் ஒரு முடிவை எட்டாமல் தொடர்ந்த நிலையில், ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அதிகாலையில் அறிவித்தார்.
இந்த இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தத்தத்துக்கு பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்தராக பங்காற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து சர்ச்சைகளையும் தீர்ப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அமெரிக்க மற்றும் ஈரான் தூதுக்குழுக்களுக்கு ஏப்ரல் 10 ஆம் தேதி பாகிஸ்தான் வருமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்தார்.
Advertisement
இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில நாள்களிலேயே, இந்த முக்கிய பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை (ஏப்.10) பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
இந்த உடன்படிக்கைக்கு ஈரான் ஒப்புதல் அளித்த நிலையில், அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான அமெரிக்க தூதுக்குழுவும் பேச்சுவார்த்தைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த வார இறுதியில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, தனது நாட்டின் தூதுக்குழு வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் வந்தடையும் என்று பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர் ரெசா அமிரி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த ஒரு பதிவை நீக்கியது குறிப்பிடத்தக்கது.