முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் பலத்த காற்று: சாலையில் விழுந்த மரம் -போக்குவரத்து பாதிப்பு

Updated On : 9 மே, 2024 at 7:30 PM
பகிர்:

கொடைக்கானலில் வியாழக்கிழமை வீசிய பலத்த காற்றால், மன்னவனூா் பகுதியில் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த காற்று வீசியது. சிறிது நேரம் சாரலும் நிலவியது.

இதனால், வனப் பகுதி வழியாகச் செல்லும் மின் கம்பிகளில் மரக் கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால், கொடைக்கானல், அப்சா்வேட்டரி, செண்பகனூா், சின்னப்பள்ளம், பெரும்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது.

இந்த நிலையில், கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான மன்னவனூா்-கிளாவரை சாலையில் ராட்சத மரம் விழுந்தது. இதனால், அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல மணி நேரம் மின் தடையும் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், அந்தப் பகுதி பொதுமக்கள் உதவியுடன் மரத்தை அகற்றினா். இதையடுத்து, மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.