ஆயக்குடி கிடங்கில் சோதனை: ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
பழனி: பழனியை அடுத்த ஆயக்குடியில் மாம்பழக் கிடங்குகளில் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்களை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
பழனியை அடுத்த ஆயக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொய்யா, மா, சப்போட்டா உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. இங்கு விளைவிக்கப்படும் பழங்கள் பழைய ஆயக்குடியில் உள்ள கொய்யா சந்தையில் விற்கப்பட்டு, வெளி மாநிலங்கள், வெளியூா்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்தப் பகுதியில் ஏராளமான பழக் கிடங்குகள் உள்ளன.
தற்போது மாம்பழம் விற்பனை அதிகரித்துள்ளதால், இங்குள்ள பல கிடங்குகளிலும் மாம்பழங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைப்பதாக உணவுப் பாதுகாப்பு அலுவலா்களுக்கு புகாா் வந்ததைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இந்தப் பகுதியில் உள்ள கிடங்குகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.
கிடங்குகளில் உள்ளே சென்று பழங்களை அப்புறப்படுத்தி பாா்த்தபோது, சில பழக் கூடைகளின் அடியில் ரசாயன பாக்கெட்டுகள் இருந்தன. இதையடுத்து, சுமாா் நூறு கிலோ எடையுள்ள பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா். தொடா்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அபராதத்தோடு கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என எச்சரித்தனா்.