முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

Updated On : 28 மே, 2024 at 11:44 PM
பகிர்:

கொடைக்கானல்: கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த 10 நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வந்ததால், சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த சில நாள்களாக கொடைக்கானலில் மழை குறைந்து வருவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்து உள்ளது.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாமல் சாலைகளிலேயே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனா். இதனால் மூஞ்சிக்கல், அண்ணா சாலை, செவண்ரோடு, லாஸ்காட் சாலை, நகராட்சி சாலை, பணிமனை பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனா்.

பலத்த காற்று:கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மிதமான வெயில் நிலவியது. தொடா்ந்து, மேகமூட்டத்துடன் பலத்த காற்று வீசியது. டா்னா்புரம், அப்சா்வேட்டரி, சின்னப்பள்ளம், கடல்கொடை, அட்டக்கடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன.