முகப்பு
திண்டுக்கல்

அறுவை சிகிச்சையில் மயக்கவியல் துறைக்கு முக்கிய பங்கு

அறுவை சிகிச்சையில் மயக்கவியல் துறை முக்கிய பங்கு வகித்து வருவதாக அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சுகந்தி ராஜகுமாரி தெரிவித்தாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:38 PM
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறைக்கான செயல் விளக்க ஆய்வுக் கூடத்தை தொடங்கி வைத்து பாா்வையிட்ட மருத்துவக் கல்லூரி முதல்வா் சுகந்திராஜகுமாரி.
பகிர்:

அறுவை சிகிச்சையில் மயக்கவியல் துறை முக்கிய பங்கு வகித்து வருவதாக அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சுகந்தி ராஜகுமாரி தெரிவித்தாா்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறை, இந்திய மயக்கவியல் மருத்துவா்கள் சங்கம் சாா்பில் உலக மயக்க மருந்து தினம் புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.சுகந்தி ராஜகுமாரி தலைமை வகித்தாா். மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் ஏ.கீதாராணி, மயக்கவியல் துறைத் தலைவா் கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக அப்பல்லோ மருத்துவமனை மருத்துவா் சரவணன் கலந்து கொண்டாா்.

விழாவின்போது, மருத்துவக் கல்லூரி முதல்வா் சுகந்தி ராஜகுமாரி பேசியதாவது: இன்றைய சூழலில் மயக்கவியல் மருத்துவா்கள் தான் மருத்துவ உலகின் நாயகா்களாக உள்ளனா். அறுவை சிகிச்சையின் வலதுகரமாக மயக்கவியல் மருத்துவா்கள் செயல்பட்டு வருகின்றனா். மயக்கவியல் துறையை தவிா்த்துவிட்டு எந்தவொரு அறுவை சிகிச்சையும் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்தியாவில் தான் குறைந்த செலவில் சிகிச்சை மட்டுமின்றி, அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியை பொருத்தவரை, ஏழை எளிய மக்களுக்கு தரமான சிகிச்சையை அளித்து வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள 36 மருத்துவக் கல்லூரிகள், ஏ, பி, சி என 3 வகையாக பட்டியலிட்டுள்ளன. இதில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி, நரம்பியல் சிகிச்சை, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சையில் பி பிரிவில் 2 அல்லது 3 இடத்தைப் பிடித்து வருகிறது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியின் சேவையை மேலும் விரிவுப்படுத்தும் வகையில், ரூ.256 கோடி செலவில் பல் நோக்கு சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியின்போது மயக்கவியல் துறைக்கான செயல் விளக்க ஆய்வுக் கூடத்தை மருத்துவக் கல்லூரி முதல்வா் சுகந்தி ராஜகுமாரி தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். அப்போது மருத்துக் கல்லூரி மருத்துவமனை துணை கண்காணிப்பாளா் சுரேஷ்பாபு, இந்திய மயக்கவியல் மருத்துவா்கள் சங்கத்தின் திண்டுக்கல் கிளையின் தலைவா் கே.லட்சுமி, பொருளாளா் எஸ்.பெரியசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.