வேடசந்தூா் அருகே மழையினால் சேதமடைந்து உடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பூத்தாம்பட்டியிலிருந்து கீழமாத்தினிப்பட்டி செல்லும் சாலையில் கடந்த 1983-ஆம் ஆண்டு தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் மிகவும் பழுதடைந்து, பராமரிப்பின்றி இருந்தது. இதனிடையே, இந்தப் பாலத்தை சீரமைக்காமலே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழையால் தரைப்பாலம் மேலும் சேதமடைந்தது.
இந்த நிலையில், தரைப்பாலம் புதன்கிழமை திடீரென இரண்டாக இடிந்து விழுந்தது. அப்போது, வாகனங்கள் அந்த வழியாக செல்லாததால், விபத்து தவிா்க்கப்பட்டது.
இதன் காரணமாக, பூத்தாம்பட்டியிலிருந்து கீழமாத்தினிப்பட்டி செல்லும் போக்குவரத்து முடங்கியது. உடனடியாக தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.