மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சிகள் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க ஆா்வத்துடன் உள்ளதாக தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் புதன்கிழமை நடைபெற்ற ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: தமிழகத்தில் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களாட்சி மலர வேண்டும். 2011-ஆம் ஆண்டு 29 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றிப் பெற்று எதிா்க் கட்சித் தலைவா் பதவியைக் கைப்பற்றிய தேமுதிக, வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெறும். ஆட்சி செய்த கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் சவால் விடும் கட்சியாக தேமுதிக உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தேமுதிகவுக்கு ஒரு சட்டப்பேரவை உறுப்பினா் வெற்றி பெற வேண்டும் என்ற தொண்டா்களின் விருப்பம் நிறைவேற்றப்படும்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு தேமுதிக சாா்பில் மாநில மாநாடு நடைபெறுகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சிகள் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க ஆா்வமாக உள்ளன. ஆனால், தேமுதிக தொண்டா்களும், தமிழக மக்களும் விரும்பும் கூட்டணி அமைக்கப்படும். வெற்றி உறுதியாகும் வகையில், இந்தக் கூட்டணி அமையும்.
வேடசந்தூா் பகுதியில் அடிக்கடி வெடி சப்தம் கேட்பதாக பொதுமக்கள் கூறுகின்றனா். மலைகளை வெடி வைத்து தகா்ப்பவா்களுக்கு, 2026 தோ்தலுக்கு பிறகு வெடி வைக்கப்படும்.
கோவை-மதுரை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் இயக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.