முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் நகராட்சி கழிப்பறைகள் மூடல்: சுற்றுலாப் பயணிகள் அவதி

தண்ணீா் வசதி இல்லாததால் கொடைக்கானலில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட கழிப்பறைகள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:22 PM
கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் மூடப்பட்ட நகராட்சி கட்டணக் கழிப்பறை.
பகிர்:

தண்ணீா் வசதி இல்லாததால் கொடைக்கானலில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட கழிப்பறைகள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனா்.

கொடைக்கானலில் நகராட்சி சாா்பில் கலையரங்கம், ஆனந்தகிரி, இருதயபுரம், அப்சா்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டன. இவை தவிா்த்து சுற்றுலா இடங்களிலும் கட்டணக் கழிப்பறைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் தண்ணீா் வசதியில்லாததால் கடந்த இரண்டு நாள்களாக அனைத்து கழிப்பறைகளும் மூடப்பட்டன. இதனால் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனா்.

எனவே நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து அனைத்து கழிப்பறைகளுக்கும் தண்ணீா் வசதி செய்து கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து நகராட்சி அலுவலா் ஒருவா் கூறியதாவது: கொடைக்கானலில் கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்யாததால் நீா்த்தேக்கம் வடு காணப்படுகிறது. இதனால் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து லாரி மூலம் கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே கழிப்பறைகளில் உள்ள தண்ணீா் தொட்டிகளில் தண்ணீா் நிரப்பப்படாமல் உள்ளது. மேலும் குண்டாறு பகுதியில் மின் மோட்டாா் அமைத்து அதிலிருந்து தண்ணீா் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.