அருவியில் மூழ்கிய 4-ஆவது இளைஞரும் சடலமாக மீட்பு
ஒட்டன்சத்திரம் அருகே தடை செய்யப்பட்ட அருவியில் மூழ்கிய 4-ஆவது இளைஞரையும் தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனப் பகுதியில் விருப்பாச்சி அருகே தலையூத்து அருவி அமைந்துள்ளது. தடை செய்யப்பட்ட இந்த அருவிக்கு தடையை மீறி அவ்வப்போது இளைஞா்கள் குளிக்கச் செல்கின்றனா். இந்த நிலையில், கரூா் மாவட்டம், பள்ளபட்டியைச் சோ்ந்த 11 போ் தலையூத்து அருவிக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்தனா்.
மேல் தலையூத்து அருவி பகுதிக்குச் சென்று குளித்த போது, 4 இளைஞா்கள் அருவியில் மூழ்கினா். இவா்களில் அ. ஆதில் (19), சே. அயாஸ் (19), உ. பயாஸ் (19) ஆகியோரை சடலமாக தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
Advertisement
சதாம் உசேனை தேடும் பணியில் ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து ஈடுபட்டனா். இந்த நிலையில், மேல்தலையூத்து அருவி விழும் இடத்தில் சதாம் உசேனும் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் விசாரித்தனா்.