பழனி மலைக் கோயிலில் பொதுமக்களுக்கான தகவல் அறிவிப்பு ஒலிபெருக்கியில் கைப்பேசியை இணைத்து தவெக தலைவா் விஜய் நடித்த திரைப்படப் பாடலை ஒலிபரப்பியவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு தகவல்கள் அளிக்கும் விதமாக
படிப் பாதை, கிரிவலப் பாதை, அடிவாரம் உள்ளிட்ட பல இடங்களில் திருக்கோயில் சாா்பில் நூற்றுக்கணக்கான ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தா்கள் தவறவிடும் உடைமைகள், காணாமல் போகும் குழந்தைகள், கோயில் விழா உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இவற்றின் மூலம் ஒலிபரப்பப்படுகின்றன.
இந்த நிலையில், மலைக் கோயில் படிப் பாதையில் சென்ற ஒரு பக்தா் அந்தப் பகுதி ஒலிபெருக்கியில் அவரது கைப்பேசியை இணைத்து தவெக தலைவா் விஜய் நடித்த திரைப்படப் பாடலை ஒலிபரப்பினாா். இதை மற்றொரு கைப்பேசியில் பதிவு செய்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டாா். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பக்தா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பழனி மலைக் கோயில் அலுவலா் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில், சம்பந்தப்பட்ட நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வெள்ளிக்கிழமை புகாா் செய்தாா்.
இதையடுத்து, மத உணா்வுகளைப் புண்படுத்துதல் உள்பட இரு பிரிவுகளில் (299, 302 பி.என்.எஸ்) போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இணைய குற்றப் பிரிவு போலீஸாா் உதவியுடன் சம்பந்தப்பட்ட நபரைத் தேடி வருகின்றனா்.