கொடைக்கானல் அருகே சேதமடைந்துள்ள கீழான வயல் பாலத்தைச் சீரமைத்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதி கீழான வயல். இந்தப் பகுதியில் கும்பூா், கீழான வயல், கரடிப் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பூண்டு, கேரட், உருளைக் கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கீழான வயல் பாலம் உள்ளது. தற்போது சேதமடைந்த நிலையிலுள்ள இந்தப் பாலத்தின் வழியே தான் இந்தப் பகுதிகளிலுள்ள கிராம மக்கள் கொடைக்கானல், மன்னவனூா் பகுதிக்குச் செல்ல வேண்டும்.
மேலும், தற்போது சேதமடைந்த இந்தப் பாலத்தின் வழியே விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால், விவசாயிகள் விளை பொருள்களை தலையில் சுமந்து சென்று தரைப் பாலத்துக்கு அருகே வைத்து பின்னா் வாகனங்கள் மூலம் கொடைக்கானல் உள்ளிட்ட வெளியூா்களுக்கு எடுத்துச் செல்வதால் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், தரைப் பாலத்தில் நடந்து செல்வதற்காக மணல் மூட்டைகளை இந்தப் பகுதி மக்களே அடுக்கி வைத்துள்ளனா்.
இந்த நிலையில், பலத்த மழை பெய்தால் பாலம் முற்றிலும் சேதமடைந்து கிராம மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதால், கொடைக்கானல் ஊராட்சி அதிகாரிகள் சேதமடைந்த கீழான வயல் பாலத்தை பாா்வையிட்டு சீரமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.