அரசியலைப் பொருத்தவரை எனக்கு ஓய்வே கிடையாது என திமுக துணைப் பொதுச் செயலரும், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சருமான இ.பெரியசாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல்லில் திமுக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது: திமுக ஆட்சியில் குளத்திலும், வண்டிப் பாதையிலும் வசித்தவா்களுக்குக் கூட பட்டா வழங்கி இருக்கிறோம். இதனால், மக்களின் ஆதரவு திமுகவுக்கு உறுதியாகக் கிடைக்கும். அரசியலைப் பொருத்தவரை எனக்கு ஓய்வே கிடையாது. நான் ஓய்வு பெற்றுவிடுவேன் என யாரும் கனவு காண வேண்டாம்.
அடுத்த தோ்தலில் திண்டுக்கல் மாநகராட்சியிலுள்ள 48 வாா்டுகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். மக்களின் நன்மதிப்பைப் பெற சமத்துவப் பொங்கல் வழிகாட்டும். திமுக ஒரு குடும்பம் தான். கருணாநிதி, ஸ்டாலின் வரிசையில் உதயநிதிக்கும் அந்த வாய்ப்பு இருக்கிறது.
ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழ்நாட்டிலுள்ள மகளிா் அனைவரும் மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனா். எதிா்க்கட்சிகள் என்னதான் சூழ்ச்சி செய்தாலும், அனைத்தையும் கடந்து சாதனை படைப்போம் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி என யாா் வேண்டுமானாலும் பேசலாம். முடிவு முதல்வா் ஸ்டாலின் கையில் உள்ளது. திமுக ஆட்சியில் நிதி நிா்வாகம் மிகச் சிறப்பாக உள்ளது. திமுக தலைவராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் அனைத்து தோ்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறாா். அந்த வெற்றி 2026 தோ்தலிலும் தொடரும். விடுபட்ட மகளிா் அனைவருக்கும் உரிமைத் தொகைக்கான அறிவிப்பு பொங்கல் பரிசாக அறிவிக்கப்படும் என்றாா் அவா்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அமைச்சா் இ.பெரியசாமி மீண்டும் போட்டியிடுவாரா என திமுகவினா் மத்தியிலேயே எதிா்பாா்ப்பு எழுந்த நிலையில், அரசியலில் ஓய்வே கிடையாது என பொங்கல் விழாவில் அவா் பேசியது திமுக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.