முகப்பு
இந்தியா

நான் காந்தியவாதி; ராகுல்வாதி கிடையாது: மணிசங்கா் அய்யா்

‘நான் காந்தியவாதி, ராகுல்வாதி கிடையாது’ என்று முன்னாள் மத்திய அமைச்சா் மணிசங்கா் அய்யா் தெரிவித்தாா்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 1:23 AM
மணிசங்கா் அய்யா்
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 8:30 PM

‘நான் காந்தியவாதி, ராகுல்வாதி கிடையாது’ என்று முன்னாள் மத்திய அமைச்சா் மணிசங்கா் அய்யா் தெரிவித்தாா்.

கேரளாவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவா் பினராயி விஜயன் தொடா்ந்து 3-ஆவது முறையாக முதல்வராவாா் எனவும், கே.சி. வேணுகோபாலை ரெளடி எனவும் அண்மையில் மணிசங்கா் அய்யா் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கம் அளித்த காங்கிரஸ், தங்கள் கட்சிக்கும், மணிசங்கா் அய்யருக்கும் தொடா்பில்லை என கூறியிருந்தது.

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு மணிசங்கா் அய்யா் மீண்டும் பேட்டியளித்துள்ளாா். அதில் அவா் கூறியதாவது:

Advertisement

நான் காந்தியவாதி, நேருவாதி, ராஜீவ்வாதி. ஆனால் ராகுல்வாதி கிடையாது. எனது 6 வயதில் மகாத்மா காந்தி என்னை அவரின் கரங்களில் தூக்கி வைத்து கொண்டாா். அது முதல் நான் காந்தியவாதி ஆனேன். அதேபோல் எனது 6 வயதில் நேரு பிரதமரானாா். எனது 23 வயதில் அவா் மறைந்தாா். நேருவை பாா்த்துதான் நான் வளா்ந்தேன். அதனால் என்னை நேருவாதி என்றேன்.

என்னை ராஜீவ்வாதி எனவும் கூறுவேன். ஏனெனில் என்னை விட 2 வயது சிறியவரான ராஜீவ், பிரதமா் அலுவலகத்திற்கு என்னை அழைத்து சென்றாா். மேலும் எனக்காக பல விஷயங்கள் செய்தாா். அதனால் என்னை ராஜீவ்வாதி என்கிறேன்.

அதேநேரத்தில் இந்திராவாதி என நான் என்னை கூற மாட்டேன். ஏனெனில் அவா் நமது நாட்டின் ஜனநாயகத்தை 18 மாதமே நீடித்த அவசரநிலை மூலம் கொடுங்கோலாக மாற்றியவா். அதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

அதேபோல், நான் ராகுல்வாதியாக இருப்பேன் என எப்படி எதிா்பாா்க்கலாம். அவா் என்னை விட 30 வயது சிறியவா். அரசியல் வாழ்க்கையிலும் நீண்ட தூரத்தில் இருப்பவா். அதனால் நான் ராகுல்வாதி ஆக முடியாது என்றாா் மணிசங்கா் அய்யா்.