முகப்பு
தினமணி கதிர்

கோலிவுட் ஸ்டூடியோ!

'மாஸ்டர்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சையமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 4:05 AM
மாளவிகா மோகனன்
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 7:43 PM

வீட்டைப் பிரிந்திருந்த ஏக்கம் - மாளவிகா மோகனன் நெகிழ்வு!

'மாஸ்டர்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சையமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தற்போது இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 'பாக்கெட் நாவல்' திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்தத் திரைபடத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அதற்காக நடிகை மாளவிகா மோகனன் சென்னை வந்து தங்கி, படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அவர் சென்னையில் தங்கியிருந்த அனுபவம் குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.

Advertisement

அதில், 'மார்ச் மாதம் எனக்கு மகிழ்ச்சியும் கலக்கமும் நிறைந்த ஒரு மாதமாக அமைந்தது. இந்த மாதத்தின் மிக முக்கியமான நிகழ்வு, 'பாக்கெட் நாவல்' படப்பிடிப்பில் கலந்துகொண்டது மற்றும் தியாகராஜன் குமாரராஜா அவர்களின் இயக்கத்தில் நடித்ததுதான்.

சந்தேகமே இன்றி, நம் தலைமுறையின் மிகச்சிறந்த இயக்குநர்களில் அவரும் ஒருவர். அவர் பணிபுரியும் விதம், அவர் என்னை வழிநடத்திய முறை மற்றும் செதுக்கிய விதம் ஆகியவை, இதுவரை என் கலைப்பயணத்தில் நான் பெற்ற மிகவும் சிறப்பான அனுபவங்களில் ஒன்றாகும். (இதைப் பற்றி விரிவாகப் பின்னர் எழுதுகிறேன், அது ஒரு நீண்ட கதை).

இந்த மாதத்தின் பெரும்பகுதியை படப்பிடிப்புக்காக சென்னையிலேயே கழித்தேன். வேலை அற்புதமாக அமைந்தாலும், இவ்வளவு காலம் வீட்டை விட்டுத் தள்ளி இருந்தது நான் எதிர்பார்த்ததைவிட என்னை அதிகமாகப் பாதித்தது. நீண்ட நாளுக்குப் பிறகு, யாரும் இல்லாத ஒரு வெற்று அறைக்குத் திரும்பி வருவது எளிதான காரியம் அல்ல. இதைத் திரும்பத் திரும்பச் செய்வதால் அது பழகிவிடும் என்று நினைத்தாலும், அது பழகுவதே இல்லை.

இந்த முறை தனிமையுடன் நான் நிஜமாகவே போராடினேன். மாதத்தின் பெரும்பகுதி வெளியூரில் இருந்த பிறகு, சில நாட்களுக்கு முன்புதான் மும்பை திரும்பினேன். வந்தவுடன் ஒரு மாலை வேளையில் படகு சவாரி சென்றேன். அந்த வானம் மூச்சடைக்க வைக்கும் அழகோடு இருந்தது. கடல் காற்று என்னைக் குணப்படுத்துவது போலவும், அலைகள் மனதை அமைதிப்படுத்துவது போலவும் உணர்ந்தேன். அந்த மாலைப் பொழுதும், இத்தனை நாட்கள் வீட்டைப் பிரிந்திருந்த ஏக்கமும், என்னை மும்பையின் மீது இன்னும் கொஞ்சம் அதிகமாகவே காதல் கொள்ளச் செய்துவிட்டன.' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 7:59 PM

பள்ளிகளில் அரசியல் விழிப்புணர்வு பாடம் - நட்டி !

தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கியிருக்கும் 'டி என் 2026' படம், அண்மையில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

படத்தின் ரிலீûஸயொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. அப்போது பேசிய நடிகர் நட்டி, 'இந்தப் படத்தின் கதையை என்னிடம் சொல்வதற்கு முன்பு தம்பி ராமையா என்னிடம் பள்ளிக்கூடத்துல தமிழ், ஆங்கிலம், கணிதம் படிப்பது போல அரசியலையும் பாடமாக்க வேண்டும் என்றார்.

முன்பெல்லாம் அரசியல் கட்சிகள் மக்களுக்குத் தொண்டு செய்யத் தொடங்கினர். ஆனால், தற்போது அது வியாபாரம் ஆக்கப்பட்டது என்றும் கூறினார். இந்த விழிப்புணர்வு மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்று அவர் சொன்னது, எனக்கு மிகவும் நியாயமாகப்பட்டது.

படத்துல 'லுக்' தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுத்தது டைரக்டர் சார் தான். டைரக்டர் என்னை இந்தப் படத்துக்குத் தேர்வு பண்ணதுக்குக் காரணம், 'இவர்னா இந்த கேரக்டர் தான் பண்ணுவார்' அப்படிங்கற பிம்பம் இல்லாத ஒருத்தரை இந்தக் கதைக்குத் தேர்வு செய்யணும்னு என்னைத் தேர்ந்தெடுத்ததாகச் சொன்னார். இது என்னை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தியது.

டீசர்-ல நீங்க பார்த்தது வெறும் 20 சதவீத 'லுக்' தான். இன்னும் அருமையான காட்சிகள் படத்துல இருக்கு. பொதுவாகவே ஒரு நடிகனாக எனக்கு ஒரு வசனத்தைப் பேசும்போது, அதை எழுதியவர் எந்த நோக்கத்தில் எழுதினாரோ அந்த நோக்கத்தை வெளிப்படுத்திவிட வேண்டும் என்பதில் குறியாக இருப்பேன். ஆனால், இந்தப் படத்தைப் பொருத்தவரை என்னைச் சுற்றி இருந்த பொதுமக்கள் நான் நடந்து வரும்போது எழுப்பிய சத்தம் எனக்கு போதையாக இருந்தது.

நிஜ வாழ்வில் அப்படி நடக்கும்போது தலைவரின் உணர்ச்சி எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து நடித்தேன். ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு கார் உண்மையாகவே பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்று நினைத்து வந்தது. அதில் இருந்தவர்கள் எங்களைப் பார்த்து புகைப்படங்கள் எல்லாம் எடுத்துச் சென்றனர்.

இந்தப் படம் மக்களை என்டர்டைன் செய்யத் தவறாது என்பதால் ரிப்பீட்டட் ஆடியன்ஸ் வருவார்கள் என்பது என்னுடைய மிகப்பெரிய கணிப்பு.' என்றார்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 7:59 PM

பிரசாந்தை பார்த்து எனக்கு பொறாமை - விஷால்!

தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த 'கோர்ட்' திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே தகவல் பேசப்பட்டது. தற்போது அப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படத்துக்கு 'ரஞ்சன்' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள்.

நடிகர் மற்றும் இயக்குநர் தியாகராஜன், 'அந்தகன்' படத்தைத் தொடர்ந்து இப்படத்தை இயக்குகிறார்.

பிரசாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரியும், தேவயானியின் மகள் ப்ரியங்காவும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நடிகர் விஷால் பேசுகையில், 'ஒரு நாள்ல ஒரே இடத்துல ரெண்டு பாசிடிவ்வான விஷயம் நடக்கிறதுல ரொம்பவே சந்தோஷம். நான் உதவி இயக்குநராக இருந்தப்போ, பிரசாந்தோட படங்களை வியந்து பார்த்திருக்கேன். நாங்க விசிலடிச்சுக் கொண்டாடின நடிகர் இவர்.

அப்போ எங்க பக்கத்துல இருக்கிற பெண்களெல்லாம் பிரசாந்தை சைட் அடிப்பாங்க. அதையெல்லாம் பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையாக இருக்கும். தொடர்ந்து சில்வர் ஜூப்ளி கொடுத்துட்டு இருப்பார்.

தியாகராஜன் சாருடைய விஷன்தான், இன்னைக்கும் பிரசாந்தை இவ்வளவு பெரிய உயரத்துல நிக்க வச்சிருக்கு. என்னுடைய அப்பா என்கிட்ட 'தியாகராஜன் சார் எப்படி அவருடைய பையனைக் கொண்டு வருகிறாரோ, அப்படி நான் உன்னை சினிமாவுக்குள்ள கூட்டி வருவேன்'னு, தியாகராஜன் சாரை எடுத்துக்காட்டாகச் சொல்லுவார்.

வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தேவயானி அத்தனை பரிச்சயம். அவருடைய பயணத்தைத் தொடர்வதற்கு ப்ரியங்காவுக்குப் பொறுப்புகள் இருக்கு.' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.