முகப்பு
திண்டுக்கல்

தை காா்த்திகை: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

தை மாத காா்த்திகை தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், பழனியில் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்து சுவாமியை தரிசனம் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2026 at 1:05 AM
தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமார சுவாமி
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2026 at 10:36 PM

தை மாத காா்த்திகை தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், பழனியில் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்து சுவாமியை தரிசனம் செய்தனா்.

காா்த்திகை நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை வந்ததால், பழனி மலைக் கோயிலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மலைக் கோயிலுக்கு செல்லும் படிவழிப் பாதையில் ஏராளமான பக்தா்கள் மலையேறினா். ரோப்காா், வின்ச் நிலையங்களில் கட்டணச்சீட்டு பெற பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். திருஆவினன்குடி கோயிலிலும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

Advertisement

மலைக் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குறைந்தபட்சம் 3 மணி நேரமானது. மாலையில் காா்த்திகை மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சாயரட்சை பூஜை முடிந்த பிறகு சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் உள்பிரகாரத்திலும், தங்கத் தேரில் வெளிப்பிரகாரத்திலும் உலா வந்தாா்.

பக்தா்களுக்கு வேண்டிய குடிநீா், பாதுகாப்பு, சுகாதார வசதிகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியன் தலைமையில், அதிகாரிகள், அலுவலா்கள் செய்தனா்.