திருச்செந்தூரில் சித்திரை விசு கனி! ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்!!
திருச்செந்தூரில் சித்திரை விசு கனி காணும் நிகழ்வை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பிறகு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும், காலை 10 மணிக்கு சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றன.
சித்திரை முதல் நாளை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
புத்தாண்டு சிறப்புப் பூஜைகளுக்கான ஏற்பாடுகளை தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
சித்திரை விசு கனி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள் பிரகாரத்தில் சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சியை முன்னிட்டு கண்ணாடி முன்பு கனிகள் வைக்கப்பட்டிருந்ததை பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர்.