பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல் காணிக்கைகள் புதன்கிழமை எண்ணப்பட்டதில், முதல் நாள் வரவாக ரூ.3.35 கோடி கிடைத்தது.
தைப் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, பக்தா்கள் வருகை அதிகரித்த காரணத்தால் இந்தக் கோயிலின் உண்டியல்கள் 15 நாள்களில் நிரம்பின. இதையடுத்து, உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கி பணியாளா்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.
முதல் நாளில் காணிக்கை வரவாக ரூ. 3,35,29,332 ரொக்கம் கிடைத்தது. பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். தங்கம் 601 கிராம், வெள்ளி 11,933 கிராம் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பணத் தாள்கள் 634 கிடைத்தன. தவிர, பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழு பிரதிநிதிகள் என பலா் பங்கேற்றனா். 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும்.