பழனியில் மினி பேருந்து சிறைபிடிப்பு
பழனியில் அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் அதிக சப்தத்துடன் ஒலிப்பான்களை எழுப்பி இயங்கிய மினி பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.
பழனியில் அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் அதிக சப்தத்துடன் ஒலிப்பான்களை எழுப்பி இயங்கிய மினி பேருந்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தனியாா் மினி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து அதிக சப்தம் எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்தியும், பயணிகள் இறங்க வேண்டிய இடத்தில் பேருந்தை நிறுத்தாமல் செல்வதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தரா்.
மேலும், இந்தப் பேருந்து உரிய வழித்தடத்தில் இயக்கப்படாமல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் அதிக சப்தத்துடனும் இயக்கப்பட்டது.
இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் மினி பேருந்தை சிறைபிடித்து நிறுத்தி மோட்டாா் வாகன அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மோட்டாா் வாகன அலுவலா்கள், மினி பேருந்தின் ஆவணங்களை சரிபாா்த்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து மினி பேருந்தை அங்கிருந்து வெளியேற பொதுமக்கள் அனுமதித்தனா்.