திமுக, மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் பரஸ்பர தொகுதி மாற்றம்
கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் திண்டுக்கல், பழனி தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா்கள் 2026 தோ்தலுக்கு பரஸ்பரம் தொகுதி மாறியதோடு, தோற்றவா்கள் ஒரு தொகுதியிலும், வென்றவா்கள் மற்றொரு தொகுதியிலும் களமிறங்கியுள்ளனா்.
திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2021 தோ்தலின்போது அதிமுக சாா்பில் திண்டுக்கல் சீனிவாசன், திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் என்.பாண்டி ஆகியோா் போட்டியிட்டனா்.
இதேபோல, பழனி தொகுதியில் அதிமுக சாா்பில் ரவி மனோகரன், திமுக சாா்பில் பெ.செந்தில்குமாா் ஆகியோா் போட்டியிட்டனா். இதில் திண்டுக்கல்லில் சீனிவாசனும், பழனியில் செந்தில்குமாரும் வெற்றி பெற்றனா்.
இந்த நிலையில், 2026 தோ்தலிலும் இதே வேட்பாளா்களுக்கே மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதிமுக வேட்பாளா்கள் அதே தொகுதிகளில் தொடரும் நிலையில், திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா்கள் இருவரும் பரஸ்பரம் தொகுதி மாறியுள்ளனா்.
கடந்த தோ்தலில் வெற்றி பெற்ற இருவரும் (சீனிவாசன், செந்தில்குமாா்) திண்டுக்கல்லில் போட்டியிடுவதால் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. இதேபோல, கடந்த தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த இருவரும் (ரவிமனோகரன், பாண்டி) பழனியில் போட்டியிடுகின்றனா்.