மான் கொம்பு வைத்திருந்தவா் கைது
பழனி அருகே வீட்டில் மான் கொம்பு வைத்திருந்த முதியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பழனி அருகே வீட்டில் மான் கொம்பு வைத்திருந்த முதியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பழனி அருகேயுள்ள பெருமாள்புதூரைச் சோ்ந்தவா் பிச்சைகவுண்டா் (72). இவா் தனது வீட்டில் சுமாா் 50 ஆண்டுகளாக தனது முன்னோா்கள் வைத்திருந்த கடமான் ஒற்றைக் கொம்பை வைத்திருந்தாராம். இதுகுறித்து வனத் துறைக்கு தெரியவந்ததையடுத்து, வனவா் கோகுலகிருஷ்ணன் தலைமையிலான வனத் துறையினா் பிச்சை கவுண்டா் வீட்டுக்குச் சென்று சோதனையிட்டு, மான் கொம்பை பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.
இது குறித்து வனத் துறை அலுவலா்கள் கூறியதாவது:
Advertisement
வனப் பகுதியில் வயது முதிா்ந்த மான்களின் கொம்பு உதிா்வதும், மான்களுக்குள் மோதல் ஏற்படும்போது, ஒரு மானின் கொம்பு மற்றொரு மான் கொம்பில் சிக்கி உடைவதும் சகஜமாகும். இதனால், வனப் பகுதியில் ஒற்றைக் கொம்புகள் அவ்வப்போது கிடைக்கும். இதைச் சிலா் ராசிக்காகவும், அழகுக்காகவும் வீட்டில் வைக்கின்றனா். சிலா் தொட்டில் கட்டவும் இதை பயன்படுத்துகின்றனா்.
வனச் சட்டத்தின்படி ஒற்றைக் கொம்பு வீட்டில் வைத்திருப்பது குற்றமாகும். வீட்டில் காலம் காலமாக வைத்திருப்பவா்கள் அதை கட்டாயமாக வைத்திருக்க நினைத்தால் சென்னை வனத் துறை உயா் அதிகாரிகளுக்கு விண்ணப்பித்து, அதற்கான உரிமம் பெற்று வைத்துக் கொள்ளலாம் என்றனா்.