பக்தி உணர்வால் சமூகத்தில் நன்மை விளையும் என வானமாமலை ஸ்ரீ மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
வானமாமலை ஸ்ரீ மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஸ்ரீரங்கத்திலிருந்து வியாழக்கிழமை மதுரை வந்தார். அவருக்கு எஸ்.எஸ். காலனி பிராமணி கல்யாண மண்டபத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.
வரவேற்பை ஏற்ற ஜீயர் சுவாமிகள் பின்னர் அருளாசி வழங்கிப் பேசியதாவது:
பெருமாளின் திருவடியாக இமயம் உள்ளது. நாபியாக (வயிறு) திருமலை உள்ளது. திருமாளின் திருவடியாக வானமாமலை உள்ளது. இயற்கை பெரும் சக்திகளான மலைகளை திருமாளின் சிரசு, நாபி, திருவடியாக பக்தர்கள் வணங்கும் நிலையில், திருவடியை பற்றியவர்களிடமிருந்து பெருமாள் அகலமுடியாத நிலை ஏற்படும் என்பதே நிஜம். நாட்டில் பக்தி உணர்வு பெருகியுள்ளது. பக்தி உணர்வால் சமூகத்தில் நன்மைகள் பல விளையும். நாம் பக்தியுணர்வுடன் செயல்பட்டு சமூகத்தை மேம்படுத்தவேண்டும் என்றார்.
ஜீயர் சுவாமிகளை எஸ்.எஸ். காலனி பிராமண கல்யாண மண்டபத்தில் வரவேற்புக் குழுத் தலைவர் புதூர் வி.ராமகிருஷ்ணன் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் என். ரெங்கராஜன் மற்றும் நம்பிகிருஷ்ணன், நம்பி சீனிவாசன், தாம்ப்ராஸ் ஜெகநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
வெள்ளிக்கிழமை பூஜைகள்: எஸ்.எஸ். காலனி பிராமண கல்யாண மண்டபத்தில் ஜீயர் சுவாமிகள் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை பூஜைகள் நடைபெறவுள்ளன. திவ்யப் பிரபந்தம், வேத கோஷங்களும் நடத்தப்படும். மாலையில் சுவாமிகள் மதுரையிலிருந்து புறப்பாடாகி திருவேடகம் சுவாமி விவேகானந்த கல்லூரிக்குச் செல்கிறார்.
பின்னர் அங்கிருந்து வாடிப்பட்டியில் உள்ள பொன் பெருமாள் மலைக்குச் சென்று தரிசனம் செய்கிறார்.